மும்பை: தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரில் மூன்றாம் வரிசை வீரராக பேட்டிங் ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்து, இந்திய ஒரு நாள் அணியிலும் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவருக்கு ஜிம்பாப்வே டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு அளிக்குமாறு இந்திய அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் அளிக்கப்படவில்லை. தற்போது இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி வெல்ல திட்டமிட்டு வருகிறது. அதற்கான அணித் தேர்வை இப்போதிருந்தே துவக்கி இருக்கிறது தேர்வுக் குழு. சாம்பியன்ஸ் டிராபி அணியில் ஆடத் தகுதியான வீரர்களை தேர்வுக்குழு பட்டியலிட்டு வைத்துள்ளது.

டி20 அணியில் இடம் பெறாத ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் ஆகியோர் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் போது அணிக்கு திரும்புவார்கள் என கருதப்படுகிறது. ரிஷப் பண்ட்டும் அப்போது அணிக்கு திரும்புவார். எனவே, மிடில் ஆர்டரில் யாரை ஆட வைப்பது என்பதில் கடும் போட்டி இருக்கும். அதேபோல, டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் இறங்கப்போவது உறுதி.
ஆனால், மாற்று வீரர்களாக யாரை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் உள்ளது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி வீரர் என்பதால் அவரை மட்டுமே மாற்று வீரராக நம்ப முடியாது. அந்த வகையில், போட்டியின் சூழ்நிலை உணர்ந்து பேட்டிங் செய்யக் கூடிய ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறது தேர்வுக் குழு.
தற்போது ஜிம்பாப்வே டி20 தொடரில் அவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ஜிம்பாப்வே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இடம் பெறாத ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் கடைசி மூன்று போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் மூவருக்கும் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதே சமயம், ருதுராஜ் கெய்க்வாட் இடம் பறிக்கப்படாது. அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரேல் ஆகியோர் அவர்கள் மூவருக்கும் இடம் கொடுத்து அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.