IND vs ZIM டி20 தொடர் ஒருதலைபட்சமாக இருக்காது.. இந்திய அணிக்கு வார்னிங் தந்த சிக்கந்தர் ராசா
ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் வியாழக்கிழமை முதல் ஹராரேவில் தொடங்குகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிம்பாப்வே கேப்டன் ஷிக்கந்தர் ராசா, இந்தியா உலக சாம்பியனாகவே இருந்தாலும், இந்த தொடர் ஒருதலைபட்சமாக நிச்சயம் இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"இரு நாடுகளுக்கும் இந்தத் தொடரில் சம வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஜிம்பாப்வே அணி மிகவும் சுவாரசியமான கிரிக்கெட்டை விளையாடி வருவதால், இந்தத் தொடர் ரசிகர்களுக்குப் பெரும் பொழுதுபோக்காக இருக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்," என்று ராசாதெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் கொழும்பில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற 23 ரன்கள் வித்தியாசத்திலான மறக்க முடியாத வெற்றி உட்பட பல சிறப்பான முடிவுகளுடன் ஜிம்பாப்வே அணி மிகுந்த நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்குகிறது. இந்த வெற்றியே ஆஸ்திரேலியா எதிர்பாராத விதமாக குரூப் சுற்றோடு வெளியேற முக்கிய காரணமாக இருந்தது.
மேலும், இந்த ஆண்டில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராகவும் ஜிம்பாப்வே வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேசிய ராசா, "வெற்றி தோல்வியைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் தொடரை வெல்ல சமமான வாய்ப்பு உள்ளது" என்றர். ஜிம்பாப்வே அணிக்காக 136 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவமிக்க ஆல்-ரவுண்டர் சிகந்தர் ரசா , இந்திய அணியின் அச்சமற்ற பேட்டிங் அணுகுமுறையை பாராட்டினார்.
"அவர்களது பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை, அன்றைய நாளில் அது சிறப்பாக அமைந்தால், அவர்கள் உங்களை ஆட்டத்தில் இருந்தே வெளியேற்றி விடுவார்கள். ஆனால், இதில் அதிக ஆபத்துகள் இருப்பதால், சில நேரங்களில் அது கைகொடுக்காமல் போகலாம். அவ்வாறு நடந்து ரன்கள் குறைவாக வரும்போது, எதிரணிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
இந்திய மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரு அணிகளும் தற்போது மாற்றங்களைச் சந்தித்து வருவதால், பலரும் எதிர்பார்ப்பதை விட இப்போட்டி மிகவும் சமபலத்துடன் இருக்கும் என்றும் ரசா சுட்டிக்காட்டினார். "ஆம், இந்தியாவும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது, ஓரளவிற்கு ஜிம்பாப்வே அணியிலும் மாற்றங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். எனவே, இதனை ஒருதலைப்பட்சமான தொடராக நான் பார்க்கவில்லை," என்றார்.
"இந்திய அணி ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த நண்பனாக இருந்து வருகிறது. வீரர்களின் பார்வையில், தற்போதைய உலக சாம்பியனான இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தையும் வளர்ச்சியையும் தரும்" என்றார். இத்தொடரின் 2வது மற்றும் 3வது போட்டிகளும் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஹராரே நகரில் நடைபெற உள்ளன.


Click it and Unblock the Notifications

