ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளது. இந்த போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் முதல் போட்டியில் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
இந்தத் தொடரின் கடைசி மூன்று போட்டிகளின் போது சிவம் துபே டி20 அணிக்கு திரும்ப உள்ளார். ரிங்கு சிங் தற்போது முதல் போட்டியில் சொதப்பிய நிலையில், இரண்டாவது போட்டியிலும் ரன் எடுக்காமல் போனால் நிச்சயமாக கடைசி மூன்று போட்டிகளிலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது. அவருக்கு பதிலாக ஐந்தாம் வரிசையில் சிவம் துபே பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ரிங்கு சிங்கிற்கு இரண்டாவது டி20 போட்டி மட்டுமே கையில் உள்ளது. அதில் அவர் சிறப்பாக ஆடி அதிக ரன்கள் குவிக்க வேண்டும். ஒருவேளை அந்தப் போட்டியில் இந்தியா சேஸிங் செய்யும் நிலை ஏற்பட்டால் ரிங்கு சிங் கடைசிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் ஃபினிஷராகவே இந்திய அணியில் தேர்வாகி இருக்கிறார். அதை அவர் இரண்டாவது டி20 போட்டியில் நிரூபித்து காட்ட வேண்டும்.
ஒருவேளை அவர் அதை செய்யாவிட்டால் சிவம் துபே டி20 அணியில் வாய்ப்பு பெறுவார். அவர் வேகப் பந்துவீச்சாளராகவும் பகுதி நேரமாக செயல்பட விரும்புவதால், ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு பந்து வீசவும் வாய்ப்பு அளிக்கப்படும். அவர் இந்த தொடரில் பகுதி நேர வேகப் பந்து வீச்சாளராக தன் திறமையை நிரூபிக்க முயல்வார். எனவே, ரிங்கு சிங்கிற்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அவர் 2024 ஐபிஎல் தொடரிலும் ரன் குவிக்கவில்லை.