ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் செய்த செயலால், சிவம் துபே ரன் அவுட் ஆனார். அதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரிங்கு சிங் மீது சிவம் துபே கடுமையாக கோபம் கொண்டார். அதனால் போட்டியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. என்ன நடந்தது?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால் 12, சுப்மன் கில் 13, அபிஷேக் ஷர்மா 14 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின் சஞ்சு சாம்சன் நிலையாக நின்று 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். ரியான் பராக் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். சிவம் துபே 19 வது ஓவரில் அதிரடியாக ரன் சேர்த்தார். அவர் அந்த ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்து கடைசி ஓவரில் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே இணைந்து அதிரடியாக ரன் குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த ரிங்கு சிங் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்தார். கேட்ச் ஆகி இருக்க வேண்டிய பந்தை ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா நழுவ விட்டார். பின்னர். அந்த பந்தை எடுத்த ஃபீல்டர் தூக்கி வீசினார். இதனிடையே ரிங்கு சிங் ஒரு ரன் ஓடும் வாய்ப்பு இருந்தது. சிவம் துபே எதிர் முனையிலிருந்து ஒரு ரன் ஓடுவதற்காக ஓடி வந்தார்.
அப்போது ரிங்கு சிங் சில அடிகள் மட்டும் எடுத்து வைத்துவிட்டு பின் வாங்கினார். ஆனால், முக்கால்வாசி தூரம் ஓடி வந்துவிட்ட சிவன் துபே, மறுமுனைக்கு ஓடுவதற்குள் ரன் அவுட் ஆனார். ரிங்கு சிங் நிச்சயமாக ஒரு ரன் முழுவதுமாக ஓடி இருக்க முடியும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. அவர் ரன் ஓடப் போவதில்லை என உறுதியாக முதலிலேயே சொல்லி இருந்தால் கூட சிவ, துபே பாதி தூரத்தில் பின்வாங்கி இருப்பார்.
ஆனால், ரிங்கு சிங் ஓடுவது போல வந்து விட்டு பின் வாங்கியதால் சிவ, துபே-வால் ரன் அவுட்டில் இருந்து தப்ப முடியாமல் போனது. துபே ரன் அவுட் ஆகி செல்லும் போது ரிங்கு சிங்கை முறைத்தபடியே சென்றார். சிவம் துபே 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்திருந்தார். ரிங்கு சிங் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சிலர் ரிங்கு சிங் சுயநலமாக, கடைசி ஓவரில் தானே பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி செய்தார் என குற்றம் சுமத்தி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.