சென்னை: டி20 உலககோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இன்று இந்தியா வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இந்திய அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கையிலே இருக்கும். இந்த தொடரில் டி20 தரவரிசையில் முதல் நிலை வீரரான அபிஷேக் ஷர்மா ஃபார்ம் இன்றி தடுமாறினார்.
அபிஷேக் சர்மா, நான்கு ஆட்டங்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து, மூன்று முறை தொடர்ச்சியாக டக் அவுட் ஆனார். இந்த சூழலில் அபிஷேக்கின் இடம் குறித்து கேள்வி எழுப்புவது நியாயமென்ற அஸ்வின், இத்தருணத்தில் பெரிய மாற்றங்கள் கூடாது என்றார்.

இது குறித்து பேசிய அஸ்வின், "அபிஷேக் தொடர வேண்டுமா, வேண்டாமா? இது ஒரு நியாயமான கேள்விதான். ஆனால், இத்தருணத்தில் மாறுதல்கள் செய்வது அணிச் சூழலுக்கு எவ்வளவு நல்லது என்று எனக்குத் தெரியவில்லை. அணியில் விளையாடும் வீரர்கள் ஹீரோக்கள் அவர்களுக்குள் சந்தேகங்கள் எழுந்தால், அவர்களால் சிறந்த பங்களிப்பை வழங்க முடியாது. துணை கேப்டனை வெளியே விட்டுள்ளோம். அவர் மனதில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது," என்றார்.

மறுபுறம், அக்சர் நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியிலும், தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 ஆட்டத்திலும் நீக்கப்பட்டார். இத்தொடரில் பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றி, மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதே போன்று, ஜிம்பாப்வேக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக, டாஸ் வென்றால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்தினார்.
இத்தொடரில் சென்னையின் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடந்த ஆறு ஆட்டங்களில், முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 187 ஆகும். இது குறிடதது பேசிய அஸ்வின், "நான் இந்தியாவின் கேப்டனாக இருந்தால், தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்வேன். சேஸிங் செய்ய விரும்பமாட்டேன்."

"இவை பகல் ஆட்டங்களாக இருந்தாலும், இந்த உலகக் கோப்பையில் சென்னையின் பேட்டிங் சூழல் சிறப்பாகவே இருந்துள்ளது."இந்திய அணி, குரூப் சுற்றின் நான்கு ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக சேஸிங் செய்தபோதுதான் இத்தொடரின் முதல் தோல்வியை சந்தித்தது.