மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் கவுதம் கம்பீர், எப்போது இருந்து தனது பணியை தொடங்குவார் என பிசிசிஐ அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்தவுடன், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
அந்த சுற்றுப் பயணத்திலிருந்து கவுதம் கம்பீர் தனது பணியை துவக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் முதல் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான அணித் தேர்வில் இருந்தே தனது பணியை துவக்கி விடுவார்.

அதன் காரணமாக இந்திய அணியில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என பல வீரர்கள் நடுக்கத்துடன் உள்ளனர். இனி கவுதம் கம்பீர் யாரை தேர்வு செய்கிறாரோ, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கம்பீர் அடிக்கடி வீரர்களை மாற்றும் குணம் கொண்டவர் அல்ல. அந்த வகையில் பார்க்கும்போது இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் இப்போதே தாங்களும் இடம்பெற வேண்டும் என அனைத்து இளம் வீரர்களும் ஆவலுடன் உள்ளனர்.
ஒருவேளை இப்போது அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இனி வாய்ப்பு கிடைப்பது கடினமானதாக மாறிவிடும். கவுதம் கம்பீரின் முதல் அணித் தேர்வு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் ஜூலை 27 முதல் துவங்க உள்ளது. அதற்கான அணித் தேர்வு இந்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சுற்றுப்பயணத்தில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா இடம்பெற மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒருநாள் அணி மற்றும் டி20 அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.