சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முக்கியமான 48வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அனுபவ வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் அளிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற பிறகு பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, "இது வழக்கமான சென்னை மைதானம் போல் எனக்குத் தெரியவில்லை. ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதலில் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளோம். கடந்த போட்டியை விட ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சில் முன்னேற்றம் காண விரும்புகிறோம். இந்திய அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். எங்கள் அணியில் ஒரு மாற்றமாக க்ரீமருக்கு பதிலாக டினோடென்டா மபோசா சேர்க்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே திட்டமிட்டிருந்தோம். அணியின் மனநிலை மிகவும் சீராகவும், நம்பிக்கையுடனும் உள்ளது. ஹர்திக் பாண்டியா அணியின் ஆற்றலை அதிகப்படுத்தி வருகிறார். வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் அதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த போட்டியில் நடந்ததை மறந்துவிட்டு, கடந்த ஓராண்டாக நாங்கள் எப்படி விளையாடினோமோ அதேபோல் பயமின்றி இன்று விளையாடுவோம். இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அக்சர் படேல் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல், ரிங்கு சிங் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்வார்" என்று தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் கருப்பு மண்ணால் தயார் செய்யப்பட்டுள்ளது. பவுண்டரி எல்லைகளைப் பொறுத்தவரை இருபுறமும் 67 மீட்டர் தூரமும், நேராக 77 மீட்டர் தூரமும் உள்ளது. இது பேட்டிங்கிற்கு மிகச் சிறந்த ஆடுகளமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் வேகத்தைக் குறைத்து வீசினால் மட்டுமே இங்கு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 170 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே அது பாதுகாப்பான ஸ்கோராக அமையும்.
இந்திய அணி: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
ஜிம்பாப்வே அணி: தடிவானாஷே மருமணி (விக்கெட் கீப்பர்), பிரையன் பென்னட், டியோன் மியர்ஸ், ரியான் பர்ல், சிக்கந்தர் ராசா (கேப்டன்), டோனி முனியோங்கா, தஷிங்கா முசேகிவா, பிராட் எவன்ஸ், டினோடென்டா மபோசா, பிளெஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் என்கரவா.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு குரூப் 1 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியதால், இந்திய அணிக்கு ரன் ரேட் குறித்த கவலை பெருமளவு நீங்கியுள்ளது. இனி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குச் சென்றுவிடலாம் என்ற நிம்மதியான மனநிலையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.