சென்னை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்ததாக இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்குச் செல்ல கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளதால், இந்திய அணியின் ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய போட்டியில் சந்தித்த தோல்வியால், அணியை முழுமையாக மாற்றியமைப்பது இந்த நேரத்தில் சரியான முடிவாக இருக்காது. அதே சமயம், சில முக்கிய மாற்றங்களை மட்டும் செய்ய இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால், நடப்பு டி20 உலகக் கோப்பையில் இது பேட்டர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தவும், ரன்களைக் கட்டுப்படுத்தவும் இங்கு மிகவும் திணறி வருகின்றனர். இதனால், ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப இந்திய அணி தனது திட்டங்களை மாற்றியமைக்க உள்ளது.
ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் சிக்கந்தர் ராசா, தொடக்க ஓவர்களிலேயே ஆஃப் ஸ்பின் வீசி நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. ஆஃப் ஸ்பின்னைச் சமாளிக்கத் தொடக்க வரிசையில் வலதுகை பேட்டர் ஒருவர் களமிறங்க வேண்டியது அவசியமாகும். எனவே, வலதுகை பேட்டரான சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் முன்கூட்டியே களமிறங்கினால், வேகப்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க அபிஷேக் சர்மா சற்று தாமதமாகக் களமிறக்கப்படலாம்.
அதேபோல, இஷான் கிஷன் மூன்றாவது வரிசையில் களமிறங்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இதே வரிசையில் அவர் சதமடித்ததுடன், ஐபிஎல் தொடரிலும் இதே இடத்தில் சிறப்பாக விளையாடி அனுபவம் பெற்றுள்ளார். இதனால், நடப்புத் தொடரில் தொடர்ந்து ரன் குவிக்கத் திணறி வரும் திலக் வர்மா இந்தப் போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஜிம்பாப்வே அணியில் வலதுகை பேட்டர்கள் அதிகம் இருப்பதால், கடந்த போட்டியில் நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்டிங் வரிசையைப் பலப்படுத்த வாஷிங்டன் சுந்தரைத் தக்கவைப்பதா அல்லது விக்கெட் வீழ்த்தும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவைக் களமிறக்குவதா என்ற ஆலோசனையும் அணி நிர்வாகத்திடம் உள்ளது.
இதற்கிடையே, குடும்ப சூழலால் இரு நாட்கள் அணியிலிருந்து விலகியிருந்த ரிங்கு சிங், மீண்டும் அணியில் இணைந்தாலும், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அணியின் சமநிலையைக் கருத்தில் கொண்டும், சுழற்பந்து வீச்சாளர்களின் தேவை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்படலாம்.

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.