மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் 15 பேர் கொண்ட வீரர்களில் ஒருவராக இருந்தார் யுஸ்வேந்திர சாஹல். அவருக்கு இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக அவருக்கு ஓராண்டு காலமாக எந்த இந்திய அணியிலும் இடம் அளிக்கப்படவில்லை. டெஸ்ட் அணி, ஒரு நாள் அணி, டி20 அணி என எதிலும் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் வேட்டையாடிய அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், மகிழ்ச்சியில் இருந்த அவர் இப்போது சோகத்தில் இருக்கிறார். ஏனெனில், டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காதது மட்டும் இல்லாமல் அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதே உலகக்கோப்பை தொடரில் சாஹலைப் போலவே 15 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், உலகக் கோப்பையில் ஒரு போட்டியிலும் ஆடாத நிலையில், அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, மாற்று வீரர்களாக இந்திய அணியுடன் பயணம் செய்த சுப்மன் கில், ஆவேஷ் கான், கலீல் அஹமத், ரிங்கு சிங் ஆகிய நால்வருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சாஹலுக்கு மட்டுமே அந்த அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இதன் மூலம், ஏற்கனவே ஓராண்டு காலம் அவரை எந்த அணியிலும் தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்திருந்தது போல தற்போது மீண்டும் பிசிசிஐ அவரை ஒதுக்கி வைக்கத் துவங்கி விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் சாஹல் அணியில் இருப்பதை விரும்பாததால் தான் அவர் நீக்கப்பட்டார் என்ற ஒரு வதந்தி முன்பு வலம் வந்தது.
ஆனால், அவர் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றதால், இனி அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு மாறாக உலகக் கோப்பை முடிந்த உடனே மீண்டும் இந்திய அணியில் இடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் பதவியேற்ற உடன் தான் சாஹல் நிலை என்ன என்பது தெரிய வரும்.