ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் போனது. இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேசுகையில், இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும் முன் பிட்ச்சில் செய்யப்பட்ட மாற்றம் தான் அவர்கள் எளிதாக வெற்றி பெற காரணம் என சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அந்த மாற்றத்தால் தான் இந்திய அணி மிக அழகாக பேட்டிங் செய்து ரன் குவித்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சொந்த நாட்டிலேயே தங்கள் அணிக்கு எதிராக போட்டியின் இடையே பிட்ச்சில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது?

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஐந்து ஓவர்களில் அந்த அணி 54 ரன்கள் சேர்த்தது. அந்த வகையில் அந்த அணியின் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் பேட்டிங்கிற்கு அது எந்த வகையிலும் ஈடாகவில்லை.
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் இழக்காமல் ஆடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்ததோடு, 15.2 ஓவர்களில் வெற்றி இலக்கையும் எட்ட உதவினர். இந்திய அணி 28 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து முடித்த பின், இன்னிங்ஸ் இடைவேளையின் போது கனமான ரோலர் இயந்திரத்தை பிட்ச் மீது இயக்கி அதில் மாற்றம் செய்யப்பட்டதை ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது குறித்து சிக்கந்தர் ராசா பேசுகையில், "இந்த விக்கெட் சற்று மந்தமாக இருந்தது. இங்கு 160 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால், இந்திய அணி பேட்டிங் ஆடியதை பார்க்கும்போது 180 ரன்கள் கூட போதுமானதாக இருக்காது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் நிறைய கற்றுக் கொண்டு வருகிறோம். நாங்கள் கடைசி ஐந்து ஓவர்களில் 54 ரன்கள் வரை எடுத்தோம். நாங்கள் இன்னும் கூட அதிக ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும்."
"அப்போது பிட்ச்சில் சற்று பவுன்ஸ் இருந்தது. பிட்ச் மெதுவாகவும் பஞ்சை போலவும் இருந்தது. துவக்கத்தில் நாங்கள் அதை சமாளித்து ஆட வேண்டியிருந்தது. ஆனால், இன்னிங்ஸ் இடைவேளையில் அதிக எடை கொண்ட ரோலரை பிட்ச்சில் இயக்கியது, இந்திய அணிக்கு தந்திரத்தை செய்தது. அதன்பின் அது அருமையான பிட்ச்சாக மாறிவிட்டது. அதில் அவர்கள் எளிதாக ஆடினார்கள்." என்று சிக்கந்தர் ராசா பேசி இருக்கிறார். ஜிம்பாப்வே அணி தனது சொந்த நாட்டிலேயே இந்திய அணிக்கு சாதகமான பிட்ச்சில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.