ஹராரே : டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் விராட் கோலி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று நட்சத்திர வீரர்களும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் மூன்று வீரர்களுக்கும் மாற்றாக யார் வரப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இதில் ஜடேஜாவின் இடத்திற்கு அக்சர் பட்டேல் தான் வரப்போகிறார் என்று ஏற்கனவே தெளிவாகிவிட்டது. ஆனால் கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் அணியில் இருப்பது நல்லது தானே. அக்சர் பட்டேல் ஏதேனும் காயம் அடைந்து விட்டாலும் இல்லை, இந்திய அளவில் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் வேண்டுமென்றாலும் அந்த இடம் யாருக்கு சொல்லப்போகிறது என்ற கேள்வி இருந்தது.

இந்த நிலையில்தான் அந்த இடத்தை தற்போது உறுதி செய்து இருக்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் முக்கிய கட்டத்தில் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 5 இன்னிங்ஸில் பந்து வீசி வாஷிங்டன் சுந்தர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 11.62 ஆகும். எனினும் வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங்கில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்திய டி20 அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு நிரந்தர இடம் கிடைத்து இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரை வெற்றியுடன் முடித்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். முதல் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவி விட்டோம். அதன் பிறகு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறோம். ஜிம்பாப்வேவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் தென்னாப்பிரிக்காவை போலவே செயல்படுகிறது.
ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. பந்து வேகமாக பேட்டுக்கு வந்தது. மேலும் இந்த ஆடுகளங்கள் எப்படி செயல்படும் என்பது குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள நேரமும் கிடைத்தது. இந்த தொடரில் எனக்கு நிறைய பாடங்கள் மற்றும் நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த தொடரில் நான் அதிக முறை பந்து வீசினேன். ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். இந்திய அணி இம்மாதம் இறுதியில் இலங்கைக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதிலும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார் என தெரிகிறது.