மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 3 ஆல்ரவுண்டர்கள், ஒரு லெக் ஸ்பின்னர், 4 வேகப்பந்துவீச்சாளர் என்ற ரீதியில் அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. 5 பேட்ஸ்மேன்களில் ருதுராஜ், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாகவே விளையாடியவர்கள். அதேபோல் ரியான் பராக், நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேகப்பந்துவீச்சாளர்களில் துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் குமார், கலீல் அஹ்மத் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கலீல் அஹ்மத் மட்டுமே இடதுகை வேகப்பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல் தமிழக வீரர் நடராஜன் 4வது இடத்தில் உள்ளார். 14 போட்டிகளில் விளையாடிய நடராஜன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பும்ராவுக்கு பின் சிறந்த எகனாமியை கொண்ட வீரராகவும் இருந்தார். ஐதராபாத் அணிக்காக பவர் பிளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் பவுலிங் செய்த நடராஜனுக்கு இடம் அளிக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கே நடராஜன் ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலாவது இடம்பெற வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால் தேர்வாகாத போது முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்ட வீரர்கள் கடுமையாக குரல் கொடுத்தனர். தற்போது மீண்டும் ஜிம்பாப்வே தொடரிலும் நடராஜன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.