மும்பை: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்து வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருப்பதால் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

ஆசியக் கோப்பை தொடருக்கு பின் மீண்டும் இந்திய அணி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணியுடன் புதிய பயிற்சியாளர் இணைவார் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அதேபோல் ஜிம்பாப்வே டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இலங்கை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய அடுத்த வாரம் பிசிசிஐ அதிகாரிகள் கூடவுள்ளனர். இந்த நிலையில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் பேசுகையில், சீனியர்கள் இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருக்கலாம் என்று கருதுகிறோம். ஏனென்றால் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணி ஹோம் சீசனில் பங்கேற்கவுள்ளது. இதனால் ரோகித் சர்மா, பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுக்கலாம் என்று கூறியுள்ளோம். ஏனென்றால் செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
அதன்பின் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நியூசிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. அதன்பின் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்று டி20 தொடர் நடக்கவுள்ளது. அதன்பின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா பயணிக்கவுள்ளது. அதேபோல் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் பெறப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.