சுயமரியாதையை மீட்டெடுத்தோம்.. முதுகுக்கு பின் திட்டியவர்கள் விருந்து வைக்கிறார்கள்.. நிதிஷ் ரெட்டி!
ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் போது ஐதராபாத் அணிக்காக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனென்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி, வேகப்பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டார். 21 வயதாகும் நிதிஷ் குமார் ரெட்டி 303 ரன்கள் விளாசியதோடு, பவுலிங்கிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி இருந்தார்.
இதனால் நிதிஷ் குமார் ரெட்டியை ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக கொண்டு வர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சியை என்சிஏவில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பின்னர் காயம் காரணமாக அவர் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து நிதிஷ் குமார் ரெட்டி பேசுகையில், சிறுவயதில் நான் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய போது எனது அப்பாவுக்கு ராஜஸ்தானுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அப்போது வேலையா அல்லது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கமா என்ற கேள்வி அப்பா முன் நின்றது. அவர் அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு, எனக்காக ஆந்திராவிலேயே இருக்க முடிவு செய்தார்.
அதனால் என்னை கவனிப்பதே அப்பாவின் வாழ்க்கையாகி போனது. அப்போது உறவினர்கள் பலரும் எனது தந்தையின் முடிவு சரியானதல்ல என்று கூறி முதுகுக்கு பின் திட்டினார்கள். ஆனால் அத்தனை விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக என்னுடன் நின்றார். இன்று எனது முன்னேற்றத்தால், முதலில் மகிழ்ச்சியடைவது என் தந்தை தான்.
முதுகுக்கு பின் திட்டிய பலரும் என்னை பாராட்டுகிறார்கள், என்னையும் தந்தையையும் விருந்துக்கு அழைக்கிறார்கள். இழந்த சுயமரியாதையை என் தந்தை மீட்டெடுத்துள்ளார்.ஜிம்பாப்வே டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று எனது உள்ளுணர்வு கூறியது. ஆனால் காயம் காரணமாக விளையாட முடியவில்லை.
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் காயமடையவது சாதாரண விஷயம் தான். இந்த நேரத்தில் என்னை யாராலும் தடுக்க முடியாது. எனது கவனம் முழுமையாக கிரிக்கெட் மீதே உள்ளது. நடந்ததை பற்றி நினைக்காமல், எதிர்காலத்திற்காக இப்போது உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications