ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று நடக்கவுள்ளது. இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சரியான நேரத்தில் ஜிம்பாப்வே செல்ல முடியாததால், மாற்று வீரர்கள் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர்.
இதன் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணி களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3க்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக ஜொலிக்க ருதுராஜ், நம்பர் 3ல் களமிறங்குவது சரியா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3ல் களமிறங்குவதே அவருக்கான சரியான இடம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணையும் பட்சத்தில், நிச்சயம் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பெஞ்சில் அமர வேண்டிய நிலை உருவாகும். தற்போது நம்பர் 3ல் தனது திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடத்தினை உறுதி செய்ய முடியும். ஏற்கனவே விராட் கோலி ஓய்வுபெற்றுள்ளதால், அவரது இடத்திற்கான மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் உருவாகவும் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணிக்காக ஏற்கனவே சில போட்டிகளில் நம்பர் 3ல் விளையாடிய அனுபவம் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு உள்ளது. தொடக்கத்தில் நிதானம் காட்டி பின்னர் அதிரடியாக விளையாடும் பாணியை கொண்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நம்பர் 3 பேட்டிங் வரிசையே சிறந்ததாகவும் இருக்கும். ஏனென்றால் பவர் பிளே ஓவர்களில் இனி டாட் பால்கள் விளையாடினாலே மிகப்பெரிய குற்றம்தான்.
ஆட்டத்தின் எந்த சூழலிலும் அதிரடியாக விளையாடக் கூடிய ருதுராஜ் கெய்க்வாட், நம்பர் 3ல் விளையாடுவதன் மூலம் 20 ஓவர்களும் பேட்டிங் செய்ய முடியும். இதனால் நம்பர் 3ல் களமிறங்கி சூழலுக்கு ஏற்ப ருதுராஜால் விளையாட முடியும். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இடதுகை பவுலர்களை எதிர்கொள்வதில் சிறிது பிரச்சனை உள்ளது. நம்பர் 3ல் வருவதன் மூலமாக எளிதாக அவர்களை சமாளிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.