ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த டி20 தொடரில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸை இழந்திருக்கிறார்.
ஏற்கனவே டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளதால், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால் ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் இருவருக்கும் பெரியளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கேற்றபடி ரியான் பராக் மற்றும் முகேஷ் குமார் இருவரும் பிளேயிங் லெவனுக்கு திரும்பினார்.

ஆனால் அவர்களுக்கு பதிலாக கலீல் அஹ்மத் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் சுப்மன் கில் ஓய்வு கொடுத்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை இலங்கை தொடருக்கு தயார் செய்ய வேண்டிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் மூவரையும் நீக்க முடியாது. இதனால் டாப் ஆர்டர் வீரர்களை நீக்க வேண்டிய நிலை வந்த போது, நியாயமாக அபிஷேக் சர்மாவை தான் சுப்மன் கில் நீக்கம் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் இந்த டி20 தொடரில் மிடில் ஆர்டர் வீரராக விளையாடி வந்தார். ஆனால் அபிஷேக் சர்மாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதனால் அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து, ருதுராஜ் கெய்க்வாடை பிளேயிங் லெவனில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில், தனது நீண்ட கால நண்பனுக்காக ருதுராஜ் கெய்க்வாட்-ஐ நீக்கியுள்ளார். சொந்த விருப்பு வெறுப்புகளுடன் இந்திய அணியின் கேப்டன் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய யு19 அணிக்காக விளையாடியது முதலே சுப்மன் கில் - அபிஷேக் சர்மா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அதன்பின்னரும் யுவராஜ் சிங் அகாடமியிலும், பஞ்சாப் அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்களிலும் இணைந்து விளையாடி வந்துள்ளனர். இதனால் இலங்கை தொடருக்கு அபிஷேக் சர்மாவை கொண்டு செல்லும் வகையில் சுப்மன் கில் முடிவு எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.