ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களுக்கான அக்னிபரீட்சையாக மாறியுள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் அவர்களின் இடத்தை நிரப்புவதோடு, மாற்று வீரர்களை தேட வேண்டிய பொறுப்பும் பிசிசிஐ-க்கு எழுந்துள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஏராளமான வீரர்களுக்கு ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்திய அணி வாய்ப்பு வழங்கியது. இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கியுள்ள வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், கேப்டன் சுப்மன் கில்லின் ஆட்டம் ரசிகர்களிடையே பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது.

ஏனென்றால் முதல் டி20 போட்டியில் 29 பந்துகளில் 31 ரன்களும், 2வது டி20 போட்டியில் 4 பந்துகளில் 2 ரன்களும், 3வது டி20 போட்டியில் 47 பந்துகளில் 67 ரன்களும் எடுத்துள்ளார். இந்த 3 டி20 போட்டிகளிலும் சுப்மன் கில்லின் ஸ்ட்ரைக் ரேட் 120க்கு மேல் செல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு ஓவரில் பவுண்டரி அடித்தால், அடுத்த சில பந்துகளில் ரன் எடுக்காமல் டாட் பால்களாக விளையாடுகிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா முழுக்க முழுக்க அட்டாக் செய்ததன் பலனை இந்தியாவே அறிந்து கொண்டது. இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் இனி ஆங்கர் ரோல் தேவையே இல்லை என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மிடில் ஓவர்களில் நிதானம் காட்டுவதற்கும், தேவைக்கேற்ப ஸ்பின்னர்களை அட்டாக் செய்வதற்கும் ருதுராஜ் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார்.
8வது விக்கெட் வரை பேட்டிங் வரிசை நீண்டிருந்த போதும், சுப்மன் கில் நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 67 ரன்களை மட்டுமே சேர்க்கிறார். அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு திரும்பிய போது, மீண்டும் தொடக்க வீரராகவே களமிறங்கி வருகிறார் சுப்மன் கில். ஏனென்றால் பவர் பிளே ஓவர்களில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் வேறு லெவலில் இருக்கும்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்து முடிவுகளை எடுக்காமல் சுப்மன் கில் கேப்டனாக தவறு செய்கிறார். இதனால் இலங்கை டி20 தொடரில் சுப்மன் கில் இந்திய அணியில் சேர்க்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் மட்டுமே சுப்மன் கில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.