ஹராரே: இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற 168 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்களை விளாசி அசத்தினார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஜிம்பாப்வே அணியில் முதல் ஓவரை வீச சிக்கந்தர் ராசா வந்தார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் சிக்ஸ் அடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் அந்த ஓவரின் 4வது பந்திலேயே ஜெய்ஸ்வால் 12 ரன்களில் போல்டாகி வெளியேற, பின்னர் இணைந்த அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி அதிரடியாக ரன்களை சேர்த்தது. அக்ரம் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது. ஆனால் அபிஷேக் சர்மா 14 ரன்களிலும், சுப்மன் கில் 13 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்பின்னர்களை மட்டும் அட்டாக் செய்து சில சிக்சர்களை இருவரும் விளாசிய நிலையில், 11 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 80 ரன்களாக உயர்ந்தது.
இந்த நிலையில் 12வது ஓவரை வீசிய மவுடா பந்தில் 2 சிக்ஸ் உட்பட 15 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் இருவரும் கியரை அதிரடிக்கு மாறினர். நன்றாக ஆடிய ரியான் பராக் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சிவம் துபே களம் புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சாம்சன் 39 பந்துகளில் அரைசதம் அடிக்க, 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 131 ரன்களாக இருந்தது.
18வது ஓவரில் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேற, 19வது ஓவரில் சிவம் துபே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை விளாசினார். ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிவம் துபே 26 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, இறுதியாக 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. கடைசி நேரத்தில் வந்த ரிங்கு சிங் 10 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார்.