ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. முதல் போட்டியில் வெற்றியை பெற்ற ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா, சக அணி வீரர்களை கடுமையாக சாடிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் முதலில் பிலஸ்ஸிங் முசர்பானி இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். அவருக்காக என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எங்கள் அணியின் பேட்டிங் தான் இன்னும் சரியாக வில்லை. நாங்கள் தொடர்ந்து பேட்டிங்கில் மோசமாக விளையாடி வருகின்றோம். தொடக்க வீரர்கள் தங்களுடைய பிரச்சனையை இன்னும் தீர்க்கவில்லை. ஏதேனும் ஒரு போட்டி அங்கேயும் இங்கேயும் சரியாக விளையாடவில்லை என்றால் கூட பரவாயில்லை.
ஆனால் தொடர்ந்து இதைப்போல் விளையாடினால் என்ன செய்வது. வெற்றி பெற்றாலும் தோல்வியைப் பெற்றாலும் களத்தில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான் போட்டியே இருக்கின்றது. களத்தில் இவ்வளவு தவறுகளை நீங்கள் செய்தால் எப்படி உங்களால் வெற்றி பெற முடியும்? இந்த தவறுகளை எல்லாம் நாம் சரி செய்து கொள்ள வேண்டும். இதனை நோக்கி நாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஒரு அணியாக நாம் சிறந்து விளங்க முடியும்.
எங்கள் அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக விளையாடதது கொஞ்சம் பின்னடைவாக அமைந்தது. ஆனால் பந்துவீச்சில் பிலஸ்ஸிங் முஸர்பானி சிறப்பாக செயல்பட்டார். அது நிச்சயம் எங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது. என்னுடைய பணிச்சுமையை கிரிக்கெட் வாரியம் பார்க்க வேண்டும் என நினைக்கின்றேன்.
ஏனென்றால் என்னுடைய தோள் பட்டை பகுதியில் காயம் இருக்கின்றது. நான் நூறு சதவீதம் உடல் தகுதியோடு இல்லை. வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடும் வீரன் நான் கிடையாது. என்னுடைய உடல் தகுதியை நான் முதலில் சரி செய்ய வேண்டும். இதற்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதற்கு மரியாதை செலுத்தி அங்கு நான் ரன்கள் குவித்தால் மட்டுமே நான் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்புவேன். டெஸ்ட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கின்றேன். ஆனால் முதலில் அதற்கு நான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று சிக்கந்தர் ராசா கூறியுள்ளார்.