ஹராரே : இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியை தழுவியதால் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா கடுப்பாகி இருக்கிறார். முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நிலையில் இந்த தொடரை வென்று சாதித்து விடலாம் என ஜிம்பாவே நினைத்தது.
ஆனால் வழக்கம் போல் அந்த பல தவறுகளை செய்ததால், இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி தோற்றது. இதனால் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் சிக்கந்தர் ராசா போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட் வர்ணனையாளரிடம் பேசும்போது கடுமையாக விமர்சனங்களை அணி வீரர்கள் மீது வைத்தார்.

இதுகுறித்து பேசிய அவர் எங்கள் அணியில் பில்டிங் எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருக்கிறது. எங்களுடைய பில்டிங்கை நினைத்து நான் பெருமை கொண்டாலும், இன்றைய ஆட்டத்தில் அது எடுபடாமல் போய்விட்டது. நாங்கள் ஒரு 20 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று விட்டோம்.
எங்கள் அணியின் டாப் வரிசையில் பிரச்சனை இருக்கிறது. அவர்கள் சரியான தொடக்கத்தை கொடுப்பதில்லை. ஆனால் தொடக்க வீரர்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்த தொடரில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் அவர்கள் நன்றாக ரன் குவிப்பார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் நாங்கள் 15 தொடக்க வீரர்களை பயன்படுத்தி விட்டோம்.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே நான் உட்பட சக வீரர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும். இளம் வீரர்கள் தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சீனியர் வீரர்கள் இப்படி தவறு செய்யக் கூடாது. அணிக்காக தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
வேறு ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சனையை சரி செய்ய முடியாது. நாங்கள் இந்த தொடரில் மூன்று தொடக்க வீரர்களை அணியில் தேர்வு செய்து இருக்கிறோம். என்னை பொருத்தவரை தொடக்க வீரர்களுக்கு தொடர்ந்து சில போட்டிகளில் வாய்ப்பு வழங்க வேண்டும். முசாரபாணி எங்கள் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் சில சமயம் அதற்கான பலன் கிடைக்காது. கண்டிப்பாக அவர் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் பலன் அவரை வந்து சேரும் என்று நம்புகிறேன் என சிக்கந்தர் ராசா கூறினார்.