சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 256 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் பிரையன் பென்னட் தனி ஆளாகப் போராடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 257 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணியின் மற்ற பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினர். ஆனால், தொடக்க வீரராகக் களமிறங்கிய பிரையன் பென்னட் மட்டும் ஒருபுறம் நிலைத்து நின்று இந்திய பந்துவீச்சாளர்களைத் திறமையாக எதிர்கொண்டார்.

அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களைச் சற்றும் சளைக்காமல் எதிர்கொண்ட அவர், மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர், 59 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 97 ரன்களைக் குவித்தார். சதமடிக்கும் வாய்ப்பை அவர் நூலிழையில் தவறவிட்டாலும், அவரது சிறப்பான ஆட்டம் இந்திய ரசிகர்களாலேயே எழுந்து நின்று பாராட்டப்பட்டது.
இந்த உலகக் கோப்பை தொடரில் பிரையன் பென்னட்டின் பேட்டிங் சராசரி 277 ஆக உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் 40 அல்லது 50 சராசரி வைத்திருப்பதே சிறந்த விஷயமாகக் கருதப்படும் நிலையில், பென்னட் 277 என்ற மலைக்க வைக்கும் சராசரியை வைத்துள்ளார். நடப்புத் தொடரில் அவர் விளையாடிய 5 போட்டிகளில் 4 முறை அவர் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
இந்தத் தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாக 277 ரன்களைக் குவித்துள்ள பென்னட்டின் பேட்டிங் சராசரியும் 277 ஆக இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் நான்கு போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்ததால் சராசரி இத்தனை அதிகமாக உள்ளது.

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரைப் பதிவு செய்தது. அபிஷேக் சர்மா 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி இந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து தங்களது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டாலும், தனி ஆளாக நின்று 97 ரன்கள் விளாசிய ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.