மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிகளில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்துள்ளது.
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நேற்றிரவு விளையாடியது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணி ஒருநாள் தொடரை பறிகொடுக்கும் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதன்பின் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் அலிஷா ஹேலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் 259 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் இந்திய அணி தரப்பில் யஷ்டிகா பாட்டியா - ஸ்மிருதி மந்தனா கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில்ம், யஷ்டிகா 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ரிச்சா கோஷ் - ஸ்மிருதி மந்தனா கூட்டணி இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா திடீரென 34 ரன்கள் எடுத்திருந்த போது, கிங் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 71 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் ரிச்சா கோஷ் - ஜெமீமா ரோட்ரிக்ஸ் கூட்டணி இணைந்து ஆஸ்திரேலியா பவுலர்களை பொளந்து கட்டியது. சிறப்பாக ஆடிய ரிச்சா கோஷ் அரைசதம் கடந்து அசத்தினார். இவர்களின் பார்ட்னர்ஷிப் 90 ரன்களை எட்டியிருந்த போது ஜெமீமா 55 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களில் நடையை கட்டினார். இதன்பின் வந்த தீப்தி சர்மா கம்பெனி கொடுக்க, ரிச்சா கோஷ் அதிரடியாக பவுண்டரிகளை விளாச தொடங்கினார். இதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 96 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இந்திய 43.5 ஓவர்களில் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 43 பந்துகளில் 41 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. ஆனால் பின்னர் வந்த வீராங்கனைகளில் அமன்ஜோத் கவுர் 4 ரன்களிலும், பூஜா வஸ்தரேக்கர் 8 ரன்களிலும், ஹர்லின் டியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 49 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 12 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.