நவி மும்பை: நவி மும்பையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025-ன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் இளம் தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் தனது முதல் உலகக் கோப்பை சதத்தை அடித்து இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி வலுவாக முன்னேறி வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த ஆஸ்திரேலியாவுக்கு, கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஆரம்பத்தில் ஏமாற்றமளித்தார். ஆனால், அதன் பிறகு களமிறங்கிய அனுபவ வீராங்கனை எலிஸ் பெர்ரியுடன் இணைந்த ஃபோப் லிட்ச்ஃபீல்ட், இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

போட்டியின் 24-வது ஓவரை வீசிய ஸ்ரீ சரணியின் பந்தை, முன்னோக்கி வந்து மிட்-ஆஃப் திசையில் பவுண்டரிக்கு விரட்டி, லிட்ச்ஃபீல்ட் தனது சதத்தை நிறைவு செய்தார். இது உலகக் கோப்பை தொடரில் அவர் அடிக்கும் முதல் சதமாகும். சதத்தை எட்டியதும், மறுமுனையில் இருந்த எலிஸ் பெர்ரி அவரை ஆரத்தழுவி பாராட்டினார்; ஆஸ்திரேலிய அணியினர் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்தச் சதத்தின் மூலம், மகளிர் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் சதம் அடித்த இளம் வீராங்கனை (22 வயது, 195 நாட்கள்) என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். மேலும், அலிசா ஹீலி மற்றும் கரேன் ரோல்டன் ஆகியோருடன் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் மதிப்புமிக்க பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறியிருந்த லிட்ச்ஃபீல்டின் விக்கெட்டை, இறுதியாக 28-வது ஓவரில் அமன்ஜோத் கவுர் வீழ்த்தினார். லேப் ஸ்வீப் ஆட முயன்றபோது, பந்து நேராக ஸ்டம்பைத் தாக்கியது. அவர் 93 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் வீழ்ந்தபோதுதான் இந்திய முகாமில் சற்று நிம்மதி பிறந்தது.
அவர் ஆட்டமிழக்கும் முன், எலிஸ் பெர்ரியுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். 29 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா: 189 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தத் திணறினர். கிராந்தி கௌட் மற்றும் அமன்ஜோத் கவுர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.