மும்பை: 2025 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டிக்கு முன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் கணுக்கால் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷஃபாலி வர்மா (வியாழக்கிழமை) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளார்.
21 வயதான ஷஃபாலி வர்மா, இவ்வளவு இளம் வயதிலேயே பல சர்வதேசப் போட்டிகளின் அழுத்தத்தை அனுபவித்தவர் என்பதால், நாக்-அவுட் போட்டிகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார். இந்த நிலையில் அவர் இந்திய அணி சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார். இந்திய அணி கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஷஃபாலி வர்மா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் வியூகத்தைப் பற்றிப் பேசினார். "நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பல முறை விளையாடியுள்ளேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் ஆரம்ப விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால், அவர்கள் அழுத்தத்தை உணரத் தொடங்குவார்கள் என்று எனக்குத் தெரியும். நாங்கள் எங்கள் பலத்தை நம்பி விளையாடுவோம்.: என்று ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு சவால் விடுத்தார்.
"நாங்கள் ஆட்டத்தை எவ்வளவு எளிமையாக வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியும். நாம் எவ்வளவு குறைவாகப் பதட்டப்படுகிறோமோ, அவ்வளவு சிறப்பாக நமது செயல்பாடு இருக்கும். பந்துவீச்சு யூனிட்டாக, நாங்கள் நல்ல லென்த்தை மெயிண்டெயின் செய்ய முயற்சிப்போம். ஆகவே, ஆம், நாங்கள் எங்களை நம்பி, விஷயங்களை எளிமையாக வைத்திருப்போம்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மீண்டும் அணிக்குள் வந்த பிறகு, தனக்கு அணி நிர்வாகம் அளித்த ஆதரவு குறித்து ஷஃபாலி மகிழ்ச்சி தெரிவித்தார். "நான் மீண்டும் அணியில் இணைந்தபோது, அனைவரும் மிகவும் வரவேற்றனர். அது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. நான் பேசிய அனைத்து வீரர்களும் எனது நம்பிக்கையை அதிகரித்தனர். பயிற்சியாளர், கேப்டன் மற்றும் ஸ்மிருதி மந்தனா உட்பட அனைவரும், 'நீ உன் ஆட்டத்தை விளையாடு, எந்த அழுத்தமும் இல்லை. நீ தெரிந்ததுபோல விளையாடு, பதட்டப்பட வேண்டாம்' என்று சொன்னார்கள். எனவே, எனக்கு நிறையச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் நல்ல பந்துகளை மதித்து, எனது எல்லைக்குள் வரும் பந்துகளை அடித்து விளையாட முயற்சிப்பேன்." என்றார் ஷஃபாலி
அரையிறுதியில் ஷஃபாலி தொடக்க வீராங்கனையாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மிடில் ஆர்டரில் கூட விளையாடவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். "அது அணி நிர்வாகத்தின் முடிவு. ஆனால் என்னைக் கேட்டால், நான் எந்த இடத்திலும் களமிறங்க தயாராக இருப்பேன். நான் ஓப்பனராகவோ அல்லது மிடில் ஆர்டரிலோ மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் விளையாடுவேன். ஒரு விளையாட்டு வீரருக்குத் தன் மீதுள்ள நம்பிக்கை மிகவும் முக்கியம். அதனால், அணி நிர்வாகம் எங்கு விளையாடச் சொல்கிறதோ, நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.