டெல்லி: அருண் ஜெட்லி மைதானத்தில் சனிக்கிழமை அன்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மாபெரும் ஒருநாள் போட்டி சாதனை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். விராட் கோலியின் சாதனையை முறியடித்து அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ரன் மலையைக் குவித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்து புதிய உலக சாதனை படைக்க, மறுபுறம் இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, விராட் கோலி-யின் மாபெரும் சாதனையைத் தகர்த்தெறிந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் 412 ரன்கள் குவிப்பு ஒருபுறம் இருந்தாலும், மந்தனாவின் இந்த மின்னல் வேக சதம், இந்திய ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் பாதியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்திராத ஒரு சாதனையை நிகழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி. நான்காவது வீராங்கனையாகக் களமிறங்கிய பெத் மூனி, இந்திய பந்துவீச்சை சற்றும் கருணை காட்டாமல் விளாசித் தள்ளினார். அவரது அதிரடியான 138 ரன்கள் உதவியுடன், ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பெத் மூனி 57 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம், மகளிர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக 400 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது. இதற்கு முன்பு, இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 371 ரன்களாக இருந்தது, அந்தச் சாதனையை நிகழ்த்தியதும் ஆஸ்திரேலியாதான்.
413 ரன்கள் என்ற நம்பவே முடியாத இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு புயலைப் போல பதிலடி கொடுக்கத் தொடங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். அவரது ஆட்டத்தில் அனல் பறக்க, ரன்கள் மளமளவென உயர்ந்தன.
யாருமே எதிர்பாராத ஒரு தருணத்தில், வெறும் 50 பந்துகளை மட்டுமே சந்தித்து, தனது சதத்தை நிறைவு செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பிரமிக்க வைத்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் 12 ஆண்டுகால சாதனையை அவர் தகர்த்தெறிந்தார். 2013 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 52 பந்துகளில் அடித்த சதமே இதுவரை இந்திய வீரர் ஒருவரின் அதிவேக சதமாக இருந்தது. தற்போது, மந்தனா அதனை முறியடித்து புதிய சகாப்தம் படைத்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனாவின் இந்த சாதனை, இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் ஒரு மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மெக் லானிங், 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 45 பந்துகளில் அடித்த சதமே இப்போதும் முதலிடத்தில் உள்ளது.
ஒரே போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 57 பந்துகளில் சதமடித்த நிலையில், அவரை விட வேகமாக சதமடித்து மந்தனா பதிலடி கொடுத்தது, இந்தப் போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டியது.