நவி மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலியா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்த வெற்றிக்கு முன் சர்ச்சைக்குரிய டிஆர்எஸ் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்து வெளியேறினார். "தான் அவுட் இல்லை" என மந்தனா மைதானத்திலேயே சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அபாரமான ஃபார்மில் இருந்த அவர், பெவிலியன் திரும்பினார்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மந்தனா, 24 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 339 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக் கொண்டு இருந்த இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது.

போட்டியின் 10-வது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. ஆஸ்திரேலிய வீராங்கனை கிம் கார்த் வீசிய பந்து, லெக்-சைடில் சென்றது. அதை ஃபைன் லெக் திசையில் அடிக்க முயன்றார் மந்தனா. ஆனால், கள நடுவர் அதை 'வைடு' என சிக்னல் செய்தார். பந்துவீச்சாளர் கார்த் மற்றும் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி ஆகியோர்கூட அந்த அப்பீலில் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
இருப்பினும், டிஆர்எஸ் டைமர் முடிய வெறும் மூன்று வினாடிகள் இருந்த நிலையில், கேப்டன் ஹீலி கடைசி நேரத்தில் ரிவ்யூ செய்தார். மந்தனா உடனடியாக புன்னகையுடன் 'இல்லை' என்பது போல தலையசைத்தார். பேட்டில் பந்து படவே இல்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மந்தனாவும், மறுமுனையில் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் மைதானத்தின் நடுவில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
மந்தனா தொடர்ந்து தலையசைத்து, பந்து பேட்டில் படவில்லை என்பதை சைகை மூலமாகத் தெரிவித்துக்கொண்டே இருந்தார். ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரீப்ளேவில் பந்து பேட்டைக் கடக்கும்போது 'அல்ட்ரா எட்ஜ்' தொழில்நுட்பத்தில் ஒரு தெளிவான ஸ்பைக் (spike) தெரிந்தது. இதைக் கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனைகள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
அந்த முடிவைக் கண்ட ஸ்மிருதி மந்தனா, கண்கள் விரிய, வாய் சற்று திறந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். உடனடியாக ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் திரும்பி, பேட் படவில்லை என்று கூறினார். திரையில் காட்டப்பட்ட ஆதாரத்தை அவரால் நம்பவே முடியவில்லை. கள நடுவரிடமும் அதே விஷயத்தைக் கூறினார். நடுவரும் அந்த முடிவைக் கண்டு ஒரு கணம் ஆச்சரியமடைந்தார். ஏனெனில், அவரும் பேட் படவில்லை என நினைத்து அவுட் இல்லை என கூறி இருந்தார்.
மூன்றாவது நடுவர் "அவுட்" என அறிவித்ததும், மந்தனா மெதுவாக பெவிலியனை நோக்கி நடந்து சென்றார், வழிநெடுகிலும் நம்பமுடியாமல் தலையசைத்தபடியே சென்றார். அவரது ஆட்டமிழப்பைக் கண்டு இந்திய அணியின் வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி முழுவதும் அமைதியானது.
இந்த மாபெரும் ரன் சேஸிங்கில், மந்தனாவின் அதிரடியான தொடக்கத்தை பெரிதும் நம்பியிருந்த இந்திய அணிக்கு, அவரது இந்த விக்கெட் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. கடைசி நொடியில் எடுக்கப்பட்ட டிஆர்எஸ் மூலம் கிடைத்த இந்த முக்கிய விக்கெட்டால், ஆஸ்திரேலியா போட்டியின் தொடக்கத்திலேயே ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது.
ஆனால், அதன் பின் இந்திய அணி கேப்டன் ஹரம்ன்ப்ரீத் கவுர் அபாரமாக ஆடி 88 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார். ஜெமிமா ரோட்ரீகஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதியில் சதம் கடந்தார். எதிர்பாராத நேரத்தில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்த ஜெமிமா ரோட்ரீகஸ் 127 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்று 339 ரன்கள் என்ற இலக்கை எட்ட உதவினார். இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.