சவுத்தாம்ப்டன்: தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீப்தி ஷர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 259 ரன்கள் இலக்கை எளிதாக எட்டியது. மேலும், இந்த ஒருநாள் தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. சோபியா டங்க்லி 92 பந்துகளில் 83 ரன்களும், அலிஸ் டேவிட்சன்-ரிச்சர்ட்ஸ் 73 பந்துகளில் 53 ரன்களும் குவித்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரன்ட் 41 ரன்களும், எம்மா லேம்ப் 39 ரன்களும் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் கிராந்தி கௌட் 10 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும், சினே ராணா 10 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அமன்ஜோத் கவுர் மற்றும் ஸ்ரீ சரணி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணிக்கு 259 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் 51 பந்துகளில் 36 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 24 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். இந்த ஆட்டத்தின் மூலம் ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் 4500 ரன்களை கடந்ததோடு, மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தார். ஹர்லீன் தியோல் 44 பந்துகளில் 27 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 27 பந்துகளில் 17 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 10 ரன்களும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில், கடைசி வரை களத்தில் நின்று ஆடிய தீப்தி ஷர்மா 64 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் தீப்தி சர்மா. ஜெமிமா 54 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். பின்னர், அமன்ஜோத் கவுர் 14 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். தீப்தி - அமன்ஜோத் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் சேர்த்து இந்திய அணியை 48.2 ஓவர்களில் இலக்கை எட்டச் செய்தனர்.