சிறப்பான ஓப்பனிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்தபோது டிக்ளர் செய்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் ஓப்பனிங் ஜோடியான ஷபாலி வர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் சிறப்பாக விளையாடினர்.
முதல் இன்னிங்ஸ்
நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 78 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷபாலி வெர்மா 96 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இதன்பின்னர் வந்த யாரும் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. 2 வீராங்கனைகள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில் இறுதியில் இந்திய மகளிர் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஃபாலோ ஆன் முறை
குறைந்த ஸ்கோர் அடித்ததால் கிரிக்கெட் விதிப்படி இந்திய அணிக்கு "பாலோ ஆன்" கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா அணியில் ஸ்மிரிதி மந்தனா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் அறிமுக வீரர் ஷபாலி வர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்ஸை போலவே 2வது இன்னிங்ஸிலும் அரை சதம் கடந்தார். ஆனால் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுகிட்டதால் 3ம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஷபாலி வர்மா 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
4ஆம் நாள்
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்திய அணி 82 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஷபாலி வர்மா 63 ரன்னில் ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 54 ரன்னும், பூனம் ராவத் 39 ரன்னும் எடுத்தனர். ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்நே ரானா பொறுப்புடன் ஆடி 80 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு டனியா பாட்டியா துணை நின்று 44 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
சமனில் முடிந்த ஆட்டம்
இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தபோது 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியை டிரா செய்தனர். இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்த ஷபாலி வர்மாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.