ராஜ்கோட்: இந்திய மகளிர் அணி மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.
அப்போது அவர் ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்தார். இதன் மூலம், அவர் பல்வேறு சாதனைகளை துவம்சம் செய்து இருக்கிறார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் காபி லீவிஸ் 129 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் 15 ஃபோர் அடித்து இருந்தார்.

ஆறாம் வரிசையில் இறங்கிய லியா பால் 73 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்திய அணிக்கு 239 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது அயர்லாந்து. இந்த இலக்கை நோக்கி இந்திய அணி சேசிங் செய்ய துவங்கியது. ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரட்டிகா ராவல் துவக்கம் அளித்தனர். பிரித்திகாவுக்கு இதுவே அறிமுக போட்டி ஆகும்.
ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடினார். அவர் 29 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். அதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்று மைல் கல்லை கடந்தார். இந்த மைல் கல்லை தாண்டிய 15 வது வீராங்கனை என்ற சாதனையை அவர் செய்தார். இந்திய அளவில் 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை ஆவார்.
இதற்கு முன் மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை தாண்டி இருந்தார். ஸ்மிருதி மந்தனா இந்த மைல்கல்லை எட்டுவதற்கு 95 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். உலக அளவில் 4000 ஒருநாள் போட்டி ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய நான்காவது வீராங்கனை ஆவார்.
மேலும், இந்திய அளவில் 100 இன்னிங்ஸ்களுக்கும் குறைவாக 4000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார். ஆடவர் கிரிக்கெட்டையும் சேர்த்து பார்க்கும் போது இந்திய அளவில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்மிருதி மந்தனா. விராட் கோலி 93 இன்னிங்ஸ்களில் 4000 ஒரு நாள் ரன்களை சேர்த்தார்.
ஸ்மிருதி மந்தனா 95 இன்னிங்ஸ்களில் அந்த இலக்கை எட்டி இருக்கிறார். ஷிகர் தவானும் 95 இன்னிங்ஸ்களில் 4000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் மகளிர் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டியில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக இருந்தார் ஸ்மிருதி மந்தனா. 2025 ஆம் ஆண்டிலும் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே மைல்கல் சாதனை படைத்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரட்டிகா ராவல் 89 ரன்களும், தேஜால் ஹசப்னிஸ் 53 ரன்களும் எடுத்தனர். 34.3 ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டியது.