அகமதாபாத் : மகளிர் டி20 உலக கோப்பையை வென்ற நியூசிலாந்த அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றில் வெளியேறியதற்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது தான் முக்கிய காரணமாக இருந்தது.
இந்த சூழலில் நியூசிலாந்தை பழித்தீர்க்கும் வாய்ப்பு தற்போது இந்திய மகளிர் அணிக்கு கிடைத்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தானா களமிறங்கினார். ஹர்மன்பிரித் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. தொடக்க வீராங்கனையாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 5 ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த செபாலி வர்மா மற்றும் யாஷிகா பாத்தியா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
செபாலி வர்மா 33 ரன்களிலும் யாஷிகா பாத்தியா 37 ரன்களிலும் வெளியேற தயாளன் ஹேமலதா மூன்று ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து நடு வரிசையில் களமிறங்கிய ஜெமிமா ரொட்ரிக்யூஸ் 36 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதேபோன்று தேஜல் 42 ரன்களிலும், தீப்தி சர்மா 41 ரன்களும் எடுக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இதனால் இந்திய மகளிர் அணி 44.3 ஓவரில் 227 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி வீராங்கனைகள் ஆரம்பம் முதலில் இருந்தே தடுமாறினர். நடு வரிசையில் புரூக் ஹாலிடே 39 ரன்களும், மெடி கிரின் 31 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் அமிலியா கெர் 25 ரன்கள் சேர்த்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் நியூசிலாந்து மகளிர் அணி 40 புள்ளி 4 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சில் ராதா யாதவ் மூன்று விக்கெட்டும் சைமா தாக்கூர் இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.