கொழும்பு: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் மகளிர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 12க்கு பூஜியம் என்ற கணக்கில் இந்திய அணி தொடர்ந்து வென்றிருக்கிறது.
இதன் மூலம் ஒரு முறை கூட இந்தியாவை பாகிஸ்தான் மகளிர் அணி வென்றதில்லை என்ற சாதனை தொடர்கிறது. கொழும்புவில் நடைபெற்ற ஆறாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் பிராதிகா ராவல் 31 ரன்களும், மந்தானா 23 ரன்களும் ஹர்லின் டியோல் 46 ரன்களும் எடுத்தனர். நடுவரிசையில் ஜெமிமா 32 ரன்களும், தீப்தி சர்மா 25 ரன்களும், ரிச்சா கோஸ் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 247 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் பந்துவீச்சில் டயானா பாக் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதை அடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் மகளிர் அணி களம் இறங்கியது. ஆரம்பம் முதலே பாகிஸ்தான் மகளிர் அணி டெஸ்ட் இன்னிங்ஸ் போல் விளையாடினார்கள்.
குறிப்பாக மொபினா அலி இரண்டு ரன்களிலும், சதாப் சமாஸ் ஆறு ரன்களிலும் அலியா ரியாஸ் இரண்டு ரன்களிலும், நாட்டாலியா 33 ரன்களிலும் கேப்டன் ஃபாத்திமா சனா இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். எனினும் அந்த அணியின் மூன்றாவது வீராங்கனை ஆக களம் இறங்கிய சிட்ரா அமின் மட்டும் அபாரமாக விளையாடி 106 பந்துகளை எதிர் கொண்டு 81 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்பரன்களில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 43வது ஓவரில் வெறும் 159 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய பந்துவீச்சு தரப்பில் கிராந்தி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் சினே ரனா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.