துபாய்: 2024 மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய குரூப் ஏ பிரிவு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது.
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி வெல்வது கடினம் என்றே விமர்சகர்கள் முதலில் கணித்து இருந்தனர். ஏனெனில், இந்திய அணி தான் ஆடிய முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்து இருந்தது. அதே சமயம், பாகிஸ்தான் அணி தான் ஆடிய முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு பக்கம் விக்கெட்களை இழந்தாலும் ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் ஹர்மன்பிரீத் ஆகியோரின் ரன் குவிப்பால் 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இது மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பெரும் ஆறாவது வெற்றி ஆகும். இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எட்டு முறை மோதி உள்ளன. அதில் ஆறு முறை இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மகளிர் டி20 உலக கோப்பையில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை செய்திருக்கிறது இந்தியா.
இந்த சாதனைப் பட்டியலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அடுத்த இடங்களில் உள்ளன. மகளிர் டி20 உலக கோப்பைகளில் பாகிஸ்தான் அணியை ஐந்து முறை வீழ்த்தி உள்ளது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா மூன்று முறை பாகிஸ்தான் அணியை டி20 உலக கோப்பைகளில் வீழ்த்தி உள்ளன.
இதன் மூலம் ஆடவர் கிரிக்கெட் மற்றும் மகளிர் கிரிக்கெட் என இரண்டு பிரிவுகளிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பைகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருவது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தாலும், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி மேலும் இரண்டு போட்டிகளை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு உறுதியாக செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.