மும்பை: 2025 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதற்கு முன்பே, இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் போட்டி முடிவை கூறியது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் 2025 ஆசிய கோப்பையில் "இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே உள்ள 11-0 என்ற வெற்றி விகிதம் என்பது ஒரு போட்டியே அல்ல" என்று பாகிஸ்தானை அவர் கிண்டலடித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், இந்திய மகளிர் அணி அவரது கணிப்பை உண்மையாக்கி காட்டியது. ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை 12வது முறையாக வீழ்த்தியது. இந்த முடிவு தான் கிடைக்கும் என சூர்யகுமார் யாதவ் இந்த உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறினார். சரியாக அது நடந்தது.
2025 மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஒரு விளையாட்டுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சூர்யகுமார் யாதவ், இந்தியா - பாகிஸ்தான் 'ரைவல்ரி' (போட்டி) குறித்த கேள்விக்குத் தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.
"இந்திய மகளிர் அணி கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வித்தியாசமான தரத்திலான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அவர்கள் அற்புதமாகச் செயல்படுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக, அவர்கள் இதேபோல் முழு கவனத்துடன் விளையாடினால், 'மிஷன் 12-0' நிச்சயம் சாத்தியம் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசியபோது, "நீங்கள் போட்டி (ரைவல்ரி) என்று பேசினால், அது இரண்டு அணிகள் 12 முறை மோதி, ஸ்கோர் 6-6 அல்லது 7-5 என்று இருந்தால் அது போட்டி. ஆனால் 11-0 என்பது ஒரு போட்டியே அல்ல. சமீப காலமாக ஆண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, மகளிர் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் அணியால் எங்களை வீழ்த்தவே முடியவில்லை. மகளிர் அணி தங்கள் ஆட்டத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தினால், அவர்களால் இதை 12-0 ஆக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று சூர்யகுமார் யாதவ் கூறி இருந்தார்.

சூர்யகுமார் யாதவின் வார்த்தைகளை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி களத்தில் நிரூபித்துக் காட்டியது. கொழும்பில் அக்டோபர் 5 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஹர்லீன் தியோலின் நிதானமான 46 ரன்கள் மற்றும் ரிச்சா கோஷின் கடைசி நேர அதிரடியான 35 ரன்கள் உதவியுடன், 247 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
இதையடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர். குறிப்பாக, தீப்தி ஷர்மாவின் சுழலில் பாகிஸ்தான் வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமீன், இந்தியாவுக்கு எதிராக 81 ரன்கள் அடித்தபோதும், அவரால் பாகிஸ்தான் அணியின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
முடிவில், பாகிஸ்தான் அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான தங்களது தோல்வியே இல்லாத சாதனையை 12-0 என நீட்டித்து, சூர்யகுமார் யாதவின் 'மிஷன் 12-0' கணிப்பை உண்மையாக்கி காட்டியுள்ளது இந்திய மகளிர் அணி.