பார்படாஸ் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டி மீண்டும் பெங்களூரு நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் மிகப்பெரிய இலக்கை தொட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக விளையாடிய செபாலி வர்மா, ஸ்மிருதி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. செபாலி வர்மா 20 ரன்களில் ஆட்டம் இழக்க தயாளன் ஹேமலதா 24 ரன்களில் வெளியேறினார்.
இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தனா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் தடுமாறினர். அபாரமாக விளையாடிய மந்தனா 120 பந்துகளை எதிர் கொண்டு 136 ரன்கள் குவித்தார். இதில் 18 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
இதுபோன்று கேப்டன் ஹர்மன்பிரித் 88 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் அளவிற்கு 325 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் களமிறங்கினர். தொடக்க வீராங்கனை தஸ்மின் ஐந்து ரன்களிலும், Anneke bosch18 ரன்களும் சுனே லூஸ் 12 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்க அணி 67 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் லாரா மற்றும் மர்சியானே ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.ஒரு கட்டத்தில் இந்த ஜோடி இந்தியாவுக்கு கடும் நெருக்கடியில் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய மர்சியானே 94 பந்துகளில் 114 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் தீப்தி சர்மா இவரது விக்கெட்டை வீழ்த்தியவுடன் தென்னாப்பிரிக்கா கொஞ்சம் தடுமாற்றத்தை கண்டது.
எனினும் கேப்டன் லாரா கடைசி வரை அதிரடியாக நின்று விளையாடினார். கீழ் வரிசை வீராங்கனைகள் பெரிய அளவில் துணை நிற்கவில்லை. இதனால் கேப்டன் லாரா தனி ஆளாக போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பூஜா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன், இரண்டாவது பந்தில் 4 ரன்கள் செல்ல வெற்றி இலக்கு நான்கு பந்துக்கு 6 ரன்கள் என மாறியது. இந்த நிலையில் பூஜா அபாரமாக பந்து வீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அது டாட் பாலாக மாறியது. இதனால் இந்திய மகளிர் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.