சென்னை: இந்திய மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணி விளையாடி வரும் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு ஆடவர் மற்றும் மகளிர் அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்து உள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்களுக்கு 525 ரன்கள் குவித்தது. ஆடவர் மற்றும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் குவிக்கப்பட்ட மிக அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க ஜோடி ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்து உலக சாதனை படைத்தனர். அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்த ஷபாலி வர்மா 197 பந்துகளில் 205 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார். ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 149 ரன்கள் குவித்தார்.
சதீஷ் சுபா 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஜெமிமா ரோட்ரீகஸ் 55 ரன்கள் சேர்த்தார். 4 விக்கெட் இழந்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் என்ற சாதனையையும், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் இந்திய மகளிர் அணி படைத்தது. இன்னும் ஆறு விக்கெட்கள் கையில் இருக்கும் நிலையில், இந்திய மகளிர் அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் அதிக ரன்கள் சேர்க்கும். அதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட ஸ்கோர் ஆன 575 ரன்கள் என்ற முந்தைய சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் ஷபாலி வர்மா அதிவேக சதம் மற்றும் அதிவேக இரட்டை சதம் அடித்து மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய அளவில் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் செய்தார்.