மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான தீப்தி சர்மா, டி20 பந்துவீச்சில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேகன் ஷட்டின் சாதனையை சமன் செய்து, உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் தீப்தி சர்மா இந்த முக்கிய சாதனையை செய்தார். இந்தியாவின் முன்னணி ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் தனது சுழற்பந்து வீச்சால் இலங்கை பேட்டர்களைத் திணறடித்தார் தீப்தி. 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.
குறிப்பாக, தனது கடைசி ஓவரில் இலங்கையின் மல்ஷா ஷெஹானியை அவர் ஆட்டமிழக்கச் செய்தபோது, டி20 கிரிக்கெட்டில் தனது 151-வது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் வைத்துள்ள 151 விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார் தீப்தி.
இந்தச் சாதனையை மேகன் ஷட் 123 போட்டிகளில் எட்டியிருந்தார். தீப்தி சர்மாவுக்கு 131 போட்டிகள் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சுழற்பந்து வீச்சாளராக நீண்ட காலமாக அணியின் வெற்றிகளில் முக்கியப் பங்காற்றி, இந்த உயரத்தைத் தொட்டிருப்பது சாதாரண விஷயல்ல. சராசரியாக 18.73 என்ற மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியைக் கொண்டுள்ளார் தீப்தி.
டி20 சாதனை ஒருபுறம் இருக்க, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்களையும் சேர்த்து அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலிலும் தீப்தி சர்மா முன்னேறியுள்ளார். மொத்தம் 333 சர்வதேச விக்கெட்டுகளுடன், இந்தப் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி (355) மற்றும் இங்கிலாந்தின் கேத்ரின் ஸ்கிவர்-பிரண்ட் (335) மட்டுமே இவருக்கு முன்னால் உள்ளனர். விரைவில் இவர்களையும் தீப்தி முந்துவார் என எதிர்பார்க்கலாம்.
தீப்தி சர்மா சாதனை படைக்க, மறுமுனையில் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தானும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தார். டாஸ் வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ரேணுகா சிங் இலங்கை அணியின் டாப் ஆர்டரைத் துவம்சம் செய்தார். 4 விக்கெட்டுகளை அள்ளி அவர் கொடுத்த நெருக்கடியால், இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹசினி பெரேரா மற்றும் இமேஷா துலானி ஆகியோர் அமைத்த சிறிய பார்ட்னர்ஷிப்பையும் தீப்தி சர்மாதான் உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
113 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3-0 எனத் தொடரை முழுமையாகக் கைப்பற்றி இலங்கையை 'வாஷ் அவுட்' செய்தது இந்தியா. உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், பந்துவீச்சில் தீப்தி சர்மா மற்றும் ரேணுகா சிங் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.