திருவனந்தபுரம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் ஒருமுறை தன் பேட்டிங் மூலம் வெற்றி தேடித் தந்துள்ளார். இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், இந்திய அணியின் ஜாம்பவான் மிதாலி ராஜின் நீண்ட கால சாதனையையும் சமன் செய்து அசத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டின் கடைசி சர்வதேச போட்டியில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியும், கேப்டனின் சாதனையும் ரசிகர்களுக்குப் புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணிக்காக அதிக முறை 'ஆட்ட நாயகி' (Player of the Match) விருதை வென்றவர் என்ற சாதனை முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் வசம் இருந்தது. மிதாலி தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 89 டி20 போட்டிகளில் விளையாடி 12 முறை இந்த விருதை வென்றிருந்தார்.
தற்போது, அந்தச் சாதனையை நம் தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சமன் செய்துள்ளார். இலங்கைக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் ஆட்ட நாயகி விருதை வென்றதன் மூலம், ஹர்மன்பிரீத் கவுரும் 12வது முறையாக இந்த விருதைப் பெற்று மிதாலி ராஜின் அரியணைக்கு அருகில் வந்துவிட்டார். ஹர்மன் இதுவரை 187 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. 4.1 ஓவரில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த போதுதான் களத்திற்கு வந்தார் ஹர்மன்பிரீத்.
வழக்கம் போல் முதலில் பொறுமையாகவும், பின்னர் அதிரடியாகவும் ஆடிய அவர், இலங்கை பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 43 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய ஹர்மன், அணியின் ஸ்கோரை 175 ரன்களுக்கு கொண்டு சென்றார். இதில் 9 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம். அமன்ஜோத் கவுருடன் இணைந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இறுதியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதே போட்டியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், தொடர் நாயகி (Player of the Series) விருதை தட்டிச் சென்றார். இது அவருக்கு 3-வது தொடர் நாயகி விருதாகும்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகி விருது வென்ற இந்திய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோருடன் ஷஃபாலி வர்மாவும் இணைந்துள்ளார். அனைவரும் தலா 3 முறை இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.