தம்புலா: 2024 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரேணுகா சிங் பவர் பிளே ஓவர்களில் அபாரமாக பந்து வீசினார். அவர் வங்கதேச அணியின் முதல் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார். நான்கு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து சுழற் பந்துவீச்சாளர் ராதா யாதவ் நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிஹார் சுல்தானா மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று ரன் சேர்த்தார். அவர் டெஸ்ட் போட்டி போல ஆடினார். 51 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ரன் குவிப்பால் மட்டுமே வங்கதேசம் கடைசி வரை அனைத்து விக்கெட்களையும் இழக்காமல் நின்று ஆடியது.
அடுத்து 81 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி ஆடியது. இந்திய அணிக்கு துவக்கம் அளித்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா வழக்கம் போல் தங்கள் அதிரடியால் வங்கதேச பந்து வீச்சை நிலை குலைய வைத்தனர். ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். அவர் 9 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். ஷபாலி வர்மா 28 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இவர்கள் இருவரும் விக்கெட் இழக்காமல் வெற்றி இலக்கை எட்ட உதவினர். இந்திய அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து வென்றது. முதல் அரை இறுதியில் வங்கதேச அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோத உள்ளன. அதில் வெற்றி பெறும் அணியுடன், இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளது.