தம்புலா: 2024 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இலங்கை அணி வெற்றி பெற்றது. முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பை வென்று வரலாறு படைத்தது.
இலங்கையில் நடைபெற்று வந்த 2024 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 60 ரன்களும், ஜெமிமா ரோட்ரீகஸ் 16 பந்துகளில் 29 ரன்களும், ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர். ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா துவக்கத்தில் நிதானமாக ரன் சேர்த்தது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், 165 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக கருதப்பட்டது.
ஆனால், அடுத்த ஆடிய இலங்கை அணி அசாதாரணமாக அந்த இலக்கை சேஸிங் செய்தது. இலங்கை அணியின் துவக்க வீராங்கனை விஸ்மி குணரத்தினே ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார். ஆனால், அதன் பின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு மற்றும் ஹர்ஷிதா இணைந்து அபாரமாக ஆடினர். சமாரி அத்தப்பட்டு 43 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.
அவர் ஆட்டம் இழந்து சென்ற பின் வந்த கவிஷா அதிரடி ஆட்டம் ஆடினார். ஹர்ஷிதா 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேபோல, கவிஷா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதை அடுத்து 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்த இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக அந்த அணி மகளிர் ஆசிய கோப்பையை வென்றது. மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியாவை தவிர்த்து வங்கதேசம் மட்டுமே ஒருமுறை வெற்றி பெற்று இருந்தது. தற்போது இலங்கை அணி மூன்றாவதாக மகளிர் ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
இதுவரை நடந்த ஒன்பது மகளிர் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியா ஏழு முறையும், வங்கதேசம் மற்றும் இலங்கை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வரலாற்று வெற்றியால் இலங்கை மகளிர் அணி மகிழ்ச்சி கடலில் திளைத்தது.
இந்திய அணியில் ராதா யாதவ் மிக மோசமாக பந்து வீசியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அவர் நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அதுவே இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.