மும்பை : நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், கிரிக்கெட் தொடரில் சுதந்திரம் கோப்பை என்று ஒரு தொடர் அழைக்கப்படும். அதாவது ஆங்கிலத்தில் பிரீடம் டிராபி என்று சொல்வார்கள். இந்த நிலையில் இது எந்த நாடுகளுக்கு இடையே நடைபெறும்.
இதன் பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் கிரிக்கெட் தொடரை ஃப்ரீடம் டிராபி என்று அழைக்கப்படும். இந்திய சுதந்திரத்தில் தென்னாப்பிரிக்காவின் பங்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் தான் மகாத்மா காந்தி முதல் முறையாக வெள்ளையர்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டு கொண்டார். மேலும் நிறவெறி எவ்வாறு தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்முன் பார்த்த காந்தி கருப்பின மக்களுக்கு ஆதரவாக முதலில் போராடினார்.
அதன் பிறகு தான் காந்திக்கு இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க போராட வேண்டும் என்ற வேட்கை வந்தது. இதனால் காந்தியின் வாழ்க்கையின் தென்னாப்பிரிக்கா மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று கருப்பின மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவில் போராடி சிறை சென்றார்.
தென் ஆப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையை கைவிடாமல் இருந்ததால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து நிறவெறி கொள்கை ஒழிக்கப்பட்ட பின்பு தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்கா மீண்டும் 1992 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் கிரிக்கெட் தொடரைவிளையாடியது.
அப்போது இந்த தொடருக்கு இரு நாட்டின் மாபெரும் தலைவர்களான காந்தி மண்டேலா என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் பின் 2015 ஆம் ஆண்டு தான் இந்த தொடரை ஃப்ரீடம் டிராபி என்று மாற்றி அமைக்கப்பட்டது. ஃப்ரீடம் டிராபி என்று மாற்றப்பட்ட பிறகு ஐந்து முறை இந்த தொடர் நடைபெற்றிருக்கிறது. இதில் இந்தியா இரண்டு முறையும், தென்னாப்பிரிக்கா இரண்டு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு முறை தொடர் சமனில் முடிவடைந்து இருக்கிறது.