மும்பை: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று, முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் பாராட்டுகளைத் தெரிவித்தார். இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றியைக் கொண்டாடும் விதமாக, சூர்யகுமார் யாதவ் நரேந்திர மோடி மைதானத்தில் வீரர்களுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சூழலில், தற்போதைய இந்திய அணி, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 வெற்றியின் மூலம், மிகச் சிறந்த 'வெள்ளைப்பந்து' அணி என்பதை நிலைநிறுத்தி விட்டதாக இர்ஃபான் பதான் புகழாரம் சூட்டினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரின் தலைமைப் பண்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

மூன்று டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற பெருமையுடன், இந்தியா இம்முறை கோப்பையை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பதான், தற்போதைய இந்திய அணி, மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வெள்ளைப்பந்து அணியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார். "இதுவே மிகச் சிறந்த 'வெள்ளைப்பந்து' அணி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை," என்று அவர் உறுதிபடக் கூறினார்.
சூர்யகுமாரின் சிறந்த தலைமையையும், வலிமையான, ஒருங்கிணைந்த அணியைக் கட்டமைத்ததில் கம்பீரின் பங்கையும் பதான் பாராட்டினார். இந்த அணி உலக அரங்கில் தொடர்ந்து சிறப்பான முடிவுகளை அளித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கௌதம் கம்பீரின் பணிவைக் கண்டு தான் ஈர்க்கப்பட்டதாகவும் இர்ஃபான் பதான் குறிப்பிட்டார்.
"கௌதம் , அஜித் அகர்கர், வி.வி.எஸ். லக்ஷ்மன், ராகுல் டிராவிட் என அனைவருக்கும் எப்படி மரியாதை அளித்தார் என்பது என்னைக் கவர்ந்தது. இது அவரது மனம் மிகவும் தூய்மையானது என்பதைக் காட்டுகிறது. உங்கள் இதயம் தூய்மையாகவும், உங்கள் நோக்கங்கள் சரியாகவும் இருந்தால், நீங்கள் முடிவுகளைப் பெறுவீர்கள். இந்திய கிரிக்கெட் அந்த வெற்றியைக் கண்டது. நீங்களும் அதற்காகப் பிரார்த்தனை செய்தீர்கள் என்பதில் சந்தேகமில்லை," என அவர் தெரிவித்தார்.
"நாங்கள் இப்போது தொடர்ச்சியாக உலகக் கோப்பைகளை வெல்லும் விதம், முன்னாள் வீரர்களாகிய எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மன அமைதியும் தருகிறது," என்று அவர் . இந்திய அணி இத்தகைய மைல்கற்களை அடையும்போதெல்லாம், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களிடையே கொண்டாட்டங்கள் தொடரும் என்றும் இர்ஃபான் பதான் முடிவாகத் தெரிவித்தார். எனினும் இர்பான் பதானின் இது தான் சிறந்த வெள்ளை பந்து அணி என்ற கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி, யுவராஜ் போன்ற ஜாம்பவான்களை மறந்துவிட கூடாது என்றும் அவர்கள் பதிலடி தந்துள்ளனர்.