நார்தாம்ப்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்தியா 'ஏ' அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழந்து 319 ரன்கள் எடுத்து இருந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்து இந்திய அணி 350 ரன்களையாவது தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி 348 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக, கே.எல். ராகுல் 116 ரன்களும், துருவ் ஜூரல் 52 ரன்களும், கருண் நாயர் 40 ரன்களும் எடுத்திருந்தனர்.

நிதிஷ் குமார் ரெட்டி 34 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இருபது ரன்களை தாண்டவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணியில் மூத்த வீரரான கிறிஸ் வோக்ஸ் 20 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஜோஷ் டங் 20.3 ஓவர்களில் 91 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
ஜார்ஜ் ஹில் 18 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். டாம் ஹெயின்ஸ் ஐந்து ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். பர்ஹான் அஹமத் 11 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இரண்டாவது நாள் அன்று இங்கிலாந்து லயன்ஸ் அணி பேட்டிங் தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் பென் மெக்கினி 12 ரன்கள் எடுத்த நிலையில், அன்சுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான முன்னோட்டமாகவே இந்தப் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா 'ஏ' அணியில் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.