IND vs ENG : ரிங்கு சிங் கனவை உடைத்த இங்கிலாந்து வீரர்.. கவலையில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?
அகமதாபாத் : இந்திய டி20 அணியில் நட்சத்திர வீரராக மாறி விட்ட ரிங்கு சிங்கை அடுத்து டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறது பிசிசிஐ. அதற்காக அவரை இந்தியா ஏ அணியில் தேர்வு செய்தது. தற்போது இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக முதல் தர டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது.
இந்தப் போட்டியில் ரிங்கு சிங் சிறப்பாக ஆடினால், தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்று வீரர் தேவைப்பட்டால் ரிங்கு சிங்கை தேர்வு செய்ய வேண்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ரிங்கு சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். அவர் ரிங்கு சிங்கின் ஐந்தாவது பந்தில் அவரை எல்பிடபுள்யூ செய்து அவுட் ஆக்கினார். அவர் மட்டுமின்று ஒட்டுமொத்த இந்தியா ஏ அணியும் மேத்யூ பாட்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் என்ற இரண்டே பந்துவீச்சாளர்களிடம் சரணடைந்தது. பாட்ஸ் 6 விக்கெட்களும், பிரைடன் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இந்தியா ஏ அணியில் தேவ்தத் படிக்கல் 65, சரன்ஷ் ஜெயின் 64 ரன்கள் குவித்து அணியின் மானத்தை காப்பாற்றினர். இல்லையென்றால் 100 ரன்கள் கூட தாண்டாமல் ஆல் - அவுட் ஆகி இருக்கும். அவர்கள் இருவரும் அரைசதம் அடித்ததால் இந்தியா ஏ அணி 50.2 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 34 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் லீஸ் 48 ரன்களுடனும், ஆலிவர் பிரைஸ் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடும் வாய்ப்பு ரிங்கு சிங்கிற்கு கிடைக்கும். அதில் அவர் ரன் குவித்தால் தன் டெஸ்ட் போட்டி கனவை அவர் தொடரலாம். அதிலும் குறைவாக ரன் எடுத்து ஆட்டமிழந்தால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது.


Click it and Unblock the Notifications