“இந்தியாவுக்கு ரொம்ப பயம்”.. ஆசிய கோப்பை பிரச்சினைக்கான காரணம் என்ன.. பாக்.சீனியர் சர்ச்சை கருத்து!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தானுக்கு வரவழைப்பதற்காக அந்நாட்டு முன்னாள் வீரர்கள் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர். ஆனால் இதில் இந்தியா சிக்காமல் தப்பித்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எப்போதுமே வார்த்தை போர்கள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதற்கு தீனி போடும் வகையில் தான் தற்போது ஆசிய கோப்பை பிரச்சினை நீடித்து வருகிறது.
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாரியம் வைத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. ஆனால் திடீரென அதற்கு முட்டுக்கட்டை போட்டார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.

என்ன பிரச்சினை
இந்திய அணி வீரர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும் என்பதால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் எனவும் ஜெய் ஷா கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் வாரியம், என்ன நடந்தாலும் பாகிஸ்தானில் போட்டிகள் நடந்தே தீரும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பையை வைத்து இந்தியாவை மிரட்டி வருகிறது.

தடாலடி பதில்
அதாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் தான் நடைபெறவுள்ளது. எனவே இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்தால் தான் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு வரும், இல்லையென்றால் புறகணித்துவிடுவோம் என தடாலடியாக அறிவித்தனர். இந்த இரு அணிகளின் மோதலை பார்க்க தான் அதிக ரசிகர்கள் வருவார்கள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு பயமா?
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் இம்ரான் நசீர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். அதில், இந்தியா கூறும் பாதுகாப்பு பிரச்சினைகளெல்லாம் காரணமே கிடையாது. ஆஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகள் பாகிஸ்தானுக்கு தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருக்கின்றன. எனவே பாதுகாப்பு என்பது சமாளிப்பதற்காக கூறப்படும் பொய்யான காரணம். இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு பயம் என்பதே உண்மையான காரணம்.

கவலையே இல்லை
பாகிஸ்தான் மண்ணில் எங்கள் வீரர்கள் பலமாக இருப்பார்கள். எனவே அங்கு தோற்றுவிடக்கூடாது என்பதற்காக தான் இப்படியெல்லாம் சமாளித்து வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இருக்கும் சுவாரஸ்யத்தை பார்ப்பதற்கு தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். எனவே அரசியல் காரணங்களை புறம்தள்ளிவிட்டு, வந்து விளையாடுங்கள். இது வெறும் விளையாட்டு தான். வென்றாலும் மகிழ்ச்சி, தோற்றாலும் கவலை இல்லை என இம்ரான் நசீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications