
திட்டம்
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட், டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் போட்டி தொடரை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. இந்தாண்டு இறுதியில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராக வேண்டும் என்ற நோக்கில் 2 நாட்டு அணிகளுடன் டி20 தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது.

எப்போது
இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி தொடர் இந்தாண்டு இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் 6 நாட்கள் மொத்தம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் போட்டி எங்கு நடத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஏக்கம்
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வந்த அரசியல் ரீதியான பிரச்னைகள் காரணமாக இரு நாட்டு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் மோதிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த 2012 - 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது.

டி20 விருந்து
இரு நாட்டு பிரச்னை காரணமாக ஆசியக்கோப்பை , உலகக்கோப்பை போன்ற ஐசிசி நடத்தும் தொடர்களில் 2 அணிகளும் மோதி வருகின்றன. நீண்ட நாட்களாக இதுபோன்ற சர்வதேச கோப்பைக்கான தொடர்களில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல விருந்தாக அமையலாம். இது சரியாக நடைபெற்றால் 2023ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்பதற்கான சிக்கல் நீங்கவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications