ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 488 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. பிறகு தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் குவித்துள்ளது. இதனால் அந்த அணி, 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. ஜோ ரூட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சதம் அடித்தனர்.

தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் சேர்த்திருந்தது. விராட் கோஹ்லி 26 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த நிலையில், 4வது நாள் ஆட்டமான இன்று உணவு இடைவேளை முடிந்ததும், இந்தியா 488 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
விராட் கோலி 40 ரன்களில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனபோதிலும், அஸ்வின் 70 ரன்கள் விளாசி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 49 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது.
49 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4வது நாள் ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது. ஹமீது 62, குக் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதையடுத்து இங்கிலாந்து அணி 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து ரன் குவித்தாலும் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்லலாம் என்றே தெரிகிறது.