புனே: 2004ல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி வென்றது. அதன் பிறகு 13 வருடங்களாக இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்கள் எதையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றவில்லை.
இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் நான்கு போட்டிகளை கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் இன்று புனேவில் தொடங்கியது.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இது. இதையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது.
சமீபத்தில்தான், சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பெற்ற வெற்றிக்கு பிறகு, ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தும் ஆர்வத்தோடு உள்ளது, விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.
இந்தியாவின் மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 20 டெஸ்ட் போட்டித் தொடரில் எதையுமே இழக்கவில்லை. டிரா அல்லது வெற்றியே பெற்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொடரிலும் பெரும் சவால் காத்திருக்கிறது.