மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி இன்று 2 வது 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
சற்றுமுன்னர் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸில் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடக்கும் போட்டியிலும் வென்றால் தொடரைக் கைப்பற்றி, ஒருநாள் போட்டித் தொடரில் பெற்ற தோல்வியை ஈடு செய்யலாம்.
இன்றைய போட்டி நடக்கும் மெல்பர்ன் மைதானம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாகும்.
தொடக்க ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடி ரன் குவிப்பும் (90 ரன்), புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சும் வெற்றியை தேடித்தந்தது.
இன்றைய ஆட்டத்திலும் இது தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அதற்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் 20 ஓவர் தொடரை கைப்பற்றுவது தான் ஒரே வழி.
20 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய யுவராஜ்சிங்குக்கு முந்தைய ஆட்டத்தில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அவருக்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு அடுத்து வரும் நியூசிலாந்து தொடரை கருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது ஆட்டத்திலும் இவர்கள் இடம் பெறமாட்டார்கள் என்று தெரிகிறது.
வார்னர் இல்லாததால் ஆரோன் பிஞ்சுடன் ஷேன் வாட்சன் தொடக்க ஆட்டக்காரராக இறங்க வாய்ப்புள்ளது. முழங்கால் காயத்தால் முதலாவது போட்டியில் ஆடாத மேக்ஸ்வெல் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.