மொஹாலி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மொஹாலியில் தொடங்கும் நிலையில் செய்தியாளர்களை ஆஸ்திரேலிய அணி கேப்டன் இன்று சந்தித்தார்.
அப்போது உலகக்கோப்பை தொடர் குறித்தும் இந்தியா தொடர் குறித்தும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் எங்களுடைய அணி நல்ல முறையில் இருக்கிறது.

ஆட்டத்தின் வெவ்வேறு கட்டத்தில் அதற்கு ஏற்றார் போல் விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டது. 100 சதவீதம் நான் தற்போது உடல் தகுதியை எட்டி இருக்கிறேன். நாளைக்கு இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார். இதேபோல் ஸ்மித்துக்கும் பேட்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. எனினும் அவர் அதிலிருந்து மீண்டு வந்து விட்டார்.
எனவே நாளை அவர் விளையாடுவார் மேலும் மேக்ஸ்வெல் மற்றும் ஆஸ்டன் ஏகார் இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. அவர்கள் இந்த தொடரின் பிற்பகுதியில் வருவார்கள் என நம்புகிறேன். மார்னஸ் லாபஸ்சேன் தென்னாப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடினார். எனவே உலகக்கோப்பையில் அவர் பெயரை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
மேலும் தென்னாப்பிரிக்கா தொடரில் ஆடம் சாம்பா பந்துவீச்சில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். எனினும் இந்திய தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என நான் நம்புகிறேன். அவர் ரன் ரெட்டை குறைவாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் முக்கிய விக்கெட்டுகளையும் எடுத்து அணிக்கு உதவுகிறார். உங்கள் அணியில் நீங்கள் நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்கிறீர்கள் என்றால் அந்த நான்கு பேரும் ஆட்டத்தில் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் பந்து வீச தயாராக இருக்க வேண்டும்.

இந்திய தொடரில் நாங்கள் வெற்றிக்கு முயற்சி செய்தாலும் உடலளவில் எங்களை நாங்கள் வருத்திக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் அருகில் இருப்பதால் முதல் போட்டியில் விளையாடும் போது நாங்கள் உற்சாகமின்றி சோர்வாகக் களமிறங்க விரும்பவில்லை. இந்த தொடரில் பிளேயிங் லெவனை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் முயற்சி செய்வோம்.
எங்கள் அணியில் மிச்செல் மார்ஷ், ஸ்டோனிஸ் மற்றும் கேமரான் கிரீன் ஆகிய ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் அது எங்களுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இரண்டுமே பலப்படுத்துகிறது. இதன் மூலம் எங்களுக்கு நான்கு அல்லது மூன்று பந்துவீச்சாளர்களை அணிக்கு தேர்வு செய்ய போதுமானதாக இருக்கும் என்று பாட் கம்மின்ஸ் கூறினார்.