ராஜ்காட் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி ராஜ்காட்டில் நடைபெறுகிறது. இந்த மைதானம் இந்தியாவுக்கு சாதகம் இல்லாத ஒரு மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு 2013 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை வெறும் மூன்று ஒரு நாள் போட்டிகள் தான் நடைபெற்றிருக்கிறது.
இதில் இரண்டில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. ஒன்றில் மட்டுமே இந்தியா வெற்றியை கண்டுள்ளது. கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப் பரிட்சை நடத்தினர்.

இதில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 340 ரன்கள் எடுக்க இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்கள் வரை எடுத்து தோல்வியை தழுவியது. இந்த ஆடுகளத்தில் டாஸ் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. காரணம் இங்கு நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணியே போட்டியில் வெற்றியை பெற்று இருக்கிறது.
மைதானத்தின் அளவு 60 முதல் 70 மீட்டர் வரை தான் இருக்கும் என்பதால் இங்கும் அதிக ரன்கள் எதிர்பார்க்கலாம். மேலும் சேசிங் செய்யும் அணிகளும் இலக்கு அருகில் வரை வந்திருக்கிறது. குறிப்பாக இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் எடுக்க இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 316 ரன்கள் வரை வந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி ஒன்றில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 270 ரன்கள் எடுக்க இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்களில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த ஆடுகளம் தோய்வு அடையவும் வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் விட சுழற் பந்துவீச்சாளர்கள் ரன்களை குறைவாக கொடுத்து விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக லெக் ஸ்பின்னர்கள் இந்த ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனில் அதிக அளவில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் என நம்பலாம்.